×

`டவ்தே’ புயலில் மாயமான 21 மீனவர்களின் குடும்பத்துக்கு தலா 20 லட்சம் உதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: `டவ்தே’ புயலில் காணாமல் போன நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 21 மீனவர் குடும்பத்திற்கு தலா ₹20 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த மாதம் 13ம் தேதி இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் `டவ் தே’ புயல் குறித்து வெளியிட்ட எச்சரிக்கையை தொடர்ந்து தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டது. இதன் காரணமாக, அரபிக்கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 246 ஆழ்கடல் மீன்பிடி படகுகள் பாதுகாப்பாக கரை திரும்பியுள்ளன.  இருப்பினும், 21 மீனவர்கள் காணாமல் போய்விட்டதாக தகவல் பெறப்பட்டது. அதன்படி, நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த IND-TN-06-MM- 5517 (முருகன் துணை) பதிவெண் கொண்ட படகு,  லட்சத்தீவிற்கு  அருகே  கடலில்  மூழ்கியதாகவும்  அதில் உள்ள 9 மீனவர் காணாமல் போய்விட்டதாகவும் தகவல் பெறப்பட்டது.

காணாமல் போன 9 மீனவர்களை தேடுதல் மற்றும் மீட்புப்பணி நடவடிக்கைகளை துரிதப்படுத்த வலியுறுத்தி முதல்வர் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியதை தொடர்ந்து மூழ்கிய படகு மற்றும் 9 மீனவர்களை பாதுகாப்பாக மீட்பதற்கு  மீட்புப்பணியில் இந்திய கடலோர காவற்படையின் கப்பல் `விக்ரம்’ மற்றும் ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டு தேடுதல் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. மேலும் லட்சத்தீவு நிர்வாகியின் ஒரு ஹெலிகாப்டரும் காணாமல் போன மீனவர்களை தேடுதல் பணியில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த சபிஷ் என்பவருக்கு சொந்தமான அமீர் ஷா என பெயர் கொண்ட மீன்பிடி விசைப்படகு பதிவு எண் INDKL07MM-4989ல் 5.5.2021 அன்று 16 மீனவர்களுடன் கேரள மாநிலம் பைபோர் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து  மீன்பிடிக்க சென்றதாகவும், 16 மீனவர்களில் 12 மீனவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும் “டவ் தே” புயல் கடந்த பின்பு அவர்கள் காணாமல் போய்விட்டதாகவும் தகவல் பெறப்பட்டது.

“டவ் தே” புயல் காரணமாக காணாமல் போன நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த 6 மீனவர்களும், மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 3 மீனவர்களும், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 12 மீனவர்களும் (மொத்தம் 21 மீனவர்கள்) மீன்பிடி தொழிலையே வாழ்வாதாரமாக கொண்டவர்கள் என்பதாலும் காணாமல் போன மீனவர்களை ஆழ்கடலில் இதுவரை ஹெலிகாப்டர் மற்றும் கடலோர காவற்படையின் கப்பல் மூலம் கடந்த 15ம் தேதி முதல் இதுவரை தொடர்ந்து தேடப்பட்டும் 21 மீனவர்களையும் கண்டுபிடித்திட இயலாத நிலை உள்ளது. எனவே “டவ் தே” புயல் காரணமாக காணாமல் போன 21 மீனவர் குடும்பங்களின் வறிய நிலையினை கருத்தில் கொண்டு காணாமல் போன மீனவர்களது வாரிசுதாரர்களுக்கு தலா ₹20 லட்சம் என்ற முறையில் ₹4.20 கோடி நிவாரண தொகையாக 21 மீனவ குடும்பங்களுக்கு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Tags : Dawde ,Chief Minister ,MK Stalin , 20 lakh each to the families of 21 fishermen stranded in 'Dawde' storm: Chief Minister MK Stalin's announcement
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து...