திருமலை : ஐதராபாத்தில் மின்சார டிரான்ஸ்பார்மர் மீது ஏறி வாட்ச்மேன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள மலைப்பகுதியை சேர்ந்தவர் அக்பர், இவர் அதே பகுதியில் உள்ள அபார்ட்மெண்ட் ஒன்றில் வாட்ச்மேனாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக அக்பருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்றுமுன்தினம் குடிபோதையில் வீட்டில் இருந்த அக்பர் திடீரென அருகில் உள்ள டிரான்ஸ்பார்மரில் ஏறி தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அப்போது, அக்பரை கீழே இறக்க அப்பகுதியினர் முயற்சித்தனர். ஆனால் டிரான்ஸ்பார்மரில் மீது ஏறிய அக்பர் டிரான்ஸ்பார்மர் மின்சார கம்பியை பிடித்ததில் சம்பவ இடத்திலேயே மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த ஐதராபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.