கொல்கத்தா: மத்திய அரசு பணிக்கு அழைக்கப்பட்டும் பணியில் சேராதது குறித்து விளக்கம் கேட்டு மேற்கு வங்க முன்னாள் தலைமை செயலாளருக்கு பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த சட்டத்தின் படி அவருக்கு சிறை தண்டனை விதிக்க வாய்ப்புள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய சென்ற பிரதமர் மோடியுடனான ஆய்வு கூட்டத்தை முதல்வர் மம்தா பானர்ஜி, தலைமை செயலாளர் புறக்கணித்ததை தொடர்ந்து, மத்திய அரசுக்கும் மம்தாவுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஆய்வு கூட்டம் முடிந்த சில மணி நேரங்களில் மேற்கு வங்க தலைமை செயலாளராக இருந்த அலிபான் பந்தோபாத்யாய் மத்திய அரசு பணிக்கு திரும்ப அழைக்கப்பட்டார்.
நேற்று முன்தினம் காலை 10 மணிக்குள் பணியில் சேர வேண்டும் என அவருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், மம்தா அவரை விடுவிக்கவில்லை. மேலும், பணிமூப்பு அடிப்படையில் அலிபான் நேற்று முன்தினம் ஓய்வு பெற்றார். தனக்கு அளிக்கப்பட்ட 3 மாத பணி நீட்டிப்பை நிராகரித்தார். இதைத் தொடர்ந்து, உடனடியாக அவரை மேற்கு வங்க அரசின் தலைமை ஆலோசகராக மம்தா நியமித்தார். இதன் மூலம் மம்தா-பிரதமர் மோடியுடனான நேரடி மோதல் உச்சக்கட்டத்தை எட்டியது. மம்தாவின் இந்த நடவடிக்கையால் மத்திய அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது. இந்நிலையில், மேற்கு வங்க முன்னாள் தலைமை செயலாளர் அலிபான் பந்தோபாத்யாய்க்கு 51 (பி) பேரிடர் மேலாண்மை சட்டத்தை மீறியதாக மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.