×

அதிகார போதைக்காக அலைந்து கொண்டிருக்கிறார் அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்தும் சசிகலாவின் எண்ணம் ஈடேறாது: கே.பி.முனுசாமி எம்எல்ஏ பாய்ச்சல்

கிருஷ்ணகிரி: அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த முயற்சி செய்யும் சசிகலாவின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. ஜெயலலிதா ஆன்மா சாந்தியடைய அவர் ஒதுங்கி இருக்க வேண்டும் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறினார். கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி எம்எல்ஏவும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி.முனுசாமி நேற்று வேப்பனஹள்ளியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழக அரசு ஆட்சிக்கு வந்து இன்றோடு 24 நாட்கள் ஆகிறது. 24 நாளில் ஆட்சியாளர்கள் அரசு இயந்திரத்தின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்கே போதாது. எனவே முதலமைச்சரும், ஆட்சியாளர்களும் செயல்படுவதற்கு எதிர்க்கட்சிகள் உறுதுணையாக இருக்கும். அதிமுகவுக்கும், சசிகலாவுக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. அவர் தற்போது அதிமுகவில் இல்லை. அதிமுகவில் எப்படியாவது குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்று ஒரு சிலர் சசிகலாவை முன்னிறுத்தி இதுபோன்று கருத்துக்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் ஏற்படுத்தும் குழப்பத்திற்கு எந்தவொரு அதிமுக தொண்டரும் செவி சாய்க்க மாட்டார்கள்.

ஒன்றரை கோடி தொண்டர்களும், பொறுப்பாளர்களும், கடுமையாக போராடி அதிமுகவை கட்டிக் காத்து வந்திருக்கிறார்கள். நல்ல முறையில் சென்று கொண்டிருக்கும், அதிமுகவை ஏதாவது ஒரு வகையில் திசை திருப்பி, குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த கருத்துகளை சொல்கிறார்கள். நிச்சயமாக அவர்களின் எண்ணம் ஈடேறாது. சசிகலா பேசிய ஆடியோவை நான் கேட்டேன். எந்த தொண்டனும் அவரிடத்தில் தானாக பேசவில்லை. மாறாக சசிகலாதான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுகிறார்.  பேசுகின்ற தொண்டனும் யார் என்றால் அமமுக தொண்டன். அவர்களோடு இருக்கும் ஒரு சிலரை சேர்த்துக் கொண்டு இதுபோன்ற குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள். இந்த கட்சியால், ஜெயலலிதாவால், சாதாரண நிலையில் இருந்த அந்த குடும்பம் இன்று தமிழகத்திலே விரல் விட்டு எண்ணக்கூடிய கோடீஸ்வர குடும்பங்களில் ஒன்றாக இருக்கிறது. அப்படி உயர்த்துவதற்கு காரணமாக இருந்த ஜெயலலிதா ஆன்மா சாந்தியடையச்செய்ய, அவர்கள் அதிமுகவில் இருந்து ஒதுங்கி அமைதியாக இருப்பது நல்லது. இல்லையென்றால், அந்த பழிபாவம் முழுவதும் சசிகலாவை சாரும்.

அதிமுகவை உருவாக்கியது எம்ஜிஆர். அதற்கு பின் ஜெயலலிதா தலைமை ஏற்று, அதிமுகவை காப்பாற்றினார். இதிலே அவர்கள் ஒண்டி வந்து ஆதாயம் தேடியவர்கள். இன்னும் அந்த ஆதாயம் கிடைக்காதா என்று அந்த அதிகார போதைக்காக அலைந்து கொண்டிருக்கிறார்கள். இனி அவர்களுக்கு அந்த வாய்ப்பே இருக்காது. உறுதியாக அவர்கள் உள்ளே நுழைய முடியாது. இந்த முடிவு அதிமுகவின் ஒவ்வொரு தொண்டனின் முடிவு. அந்தந்த பகுதியினுடைய பிரச்னைகள், தேவைகள் அடிப்படையில் தான் பழனிச்சாமியும், பன்னீர்செல்வமும் கருத்துக்களை சொல்கின்றனர். இதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று முதல்வருக்கு ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்தார். அதை ஏற்று முதல்வரும் ஒரு உத்தரவை பிறப்பிக்கிறார். தன் கோரிக்கையை ஏற்றதால், பன்னீர்செல்வம், தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது இயற்கையானது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Sasikala ,AIADMK ,Munuswamy , Wandering for power addiction Sasikala's intention to cause chaos in AIADMK will not come true: KP Munuswamy MLA leap
× RELATED சசிகலா காலில் விழுந்துதான் அனைவரும்...