பாட்னா: கடந்த 7 ஆண்டு ஆட்சியில் பிரதமர் மோடி என்ன செய்தார்? என்ற தலைப்பில் பாஜக ஆட்சி குறித்து லாலு கட்சி பீகாரில் சுவரொட்டிகளை ஒட்டி பிரசாரம் செய்து வருகிறது. பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, ஏழு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கொரேனா பாதிப்புகள் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளதால் கடந்த 2 ஆண்டாக பாஜக சார்பில் கொண்டாட்டங்கள் ஏதும் நடத்தப்பட வில்லை. இருந்தும் பாஜக சார்பில் 20 ஆயிரம் கிராமங்களில் மக்களுக்கான பல்வேறு உதவிகளை செய்யும்படி கட்சி தலைமை அறிவுறுத்தி உள்ளது.
மறுபுறம், எதிர்க்கட்சிகள் சார்பில் மோடி தலைமையிலான ஆட்சியில், கடந்த ஏழு ஆண்டுகளில் ஏற்பட்ட தோல்விகள் குறித்து கடுமையாக விமர்சித்து வருகின்றன. இதற்கிடையில், பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் மாநிலம் முழுவதும் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. அதில், பிரதமர் மோடி பதவிக்கு வரும் முன்பு, அவர் அளித்த வாக்குறுதிகளை வெளியிட்டு குற்றம்சாட்டி உள்ளது. பிரதமர் மோடியால் ஏற்பட்ட ஏழு சிக்கல்களைக் குறிப்பிட்டுள்ளனர். அதில், வேலையின்மை, ஜிஎஸ்டி வரி, பணமதிப்பிழப்பு போன்றவற்றால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ரயில்வே, பிஹெல், கெயில், பிஎஸ்என்எல், எல்ஐசி போன்றவை முதலாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கடுகு எண்ணெய் லிட்டர் ரூ .200, எல்பிஜி ரூ .960, பெட்ரோல் ரூ .100, டீசல் ரூ .93 விலை உயர்ந்துள்ளது. ஆசியாவின் ஏழ்மை நாடாக இந்தியாவை மாற்றியுள்ளீர்கள். கங்கையின் புனிதத்தை சடலம் மிதக்கும் இடமாக மாற்றியுள்ளீர் என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.