பாட்னா: பீகாரில் பணியாற்றி வரும் ஐபிஎஸ் அதிகாரி, தனது எடை குறைப்பு குறித்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அசாம் மாநில கேடர், 2006ம் ஆண்டு பேட்ஜி ஐபிஎஸ் அதிகாரி விவேக் ராஜ் சிங் குக்ரேல், தற்போது பீகாரில் பணியாற்றி வருகிறார். இவர் ஏற்கனவே அசாம் மற்றும் மத்திய பிரதேசத்தில் பணியாற்றியவர். பொறியியல் பட்டதாரியான இவர், புதிய வகை உணவை விரும்பி சாப்பிடக் கூடியவர். இவர், தேசிய போலீஸ் அகாடமியில் (என்.பி.ஏ) சேர்ந்து பயிற்சி எடுத்துக் கொண்டபோது, அவரது எடை சுமார் 134 கிலோ. கடைசியாக அவர் 8வது கிளாஸ் பயிற்சியை முடித்து எடையை பரிசோதித்த போது அவரது எடை 88 கிலோவாக குறைந்தது.
கிட்டதிட்ட 46 வாரங்கள் கடுமையான பயிற்சிக்குப் பிறகு, இவரது எடை குறைந்தது. இதுதொடர்பாக அவர், தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘தேசிய போலீஸ் அகாடமியில் பயிற்சியில் இருந்த போது, எனது உடல் எடையை குறைத்தது பெரிய சாதனையாக கருதுகிறேன். அதிகப்படியான உணவை சாப்பிட்டதால், எனது உடல் எடை போட்டது. அதுவே, எடை அதிகரிப்பதற்கான காரணம் என்பதை போக போக உணர்ந்தேன். இவ்வாறாக எடை அதிகரித்து சென்றதால், உயர் ரத்த அழுத்த பிரச்னையும் ஏற்பட்டது. என்னை பொறுத்தமட்டில் உணவை வீணாக்கக் கூடாது என்பதற்காக கிடைத்த உணவை எல்லாம் சாப்பிட்டேன்.
பல இடங்களுக்கும் நடந்தே செல்வேன். நடைபயிற்சி என்னுடைய வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறியது. இப்போது என்னுடைய ‘பிபி’ இயல்பான அளவில் உள்ளது. எடை குறைப்பு மூலம் என்னால் முன்பைவிட அதிக ஊக்கத்துடன் பணியாற்ற முடிகிறது’ என்று தெரிவித்துள்ளார்.