ஊட்டி : நீலகிரி உயிர்சூழல் மண்டலம் யுனஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் உயிர்சூழல் மண்டலமாகும். இங்கு அழிவின் விளிம்பில் உள்ள பல்வேறு வகையான தாவரங்கள், பறவைகள், விலங்கினங்களின் வாழ்விடமாக உள்ளன.
நீலகிரி உயிர்சூழல் மண்டலத்திற்குள் வரும் முதுமலை புலிகள் காப்பகத்தில் பார்ப்பதற்கு மிக அரிதான விலங்காகக் கருதப்படும் வரிக்கழுதைப்புலிகள் (Indian striped hyena) முதுமலையின் வெளி மண்டல பகுதியான மசினகுடி சமீபகாலமாக அடிக்கடி தென்படுவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
முதுமலை புலிகள் காப்பக அதிகாரிகள் கூறுகையில், ‘‘வரி கழுதை புலிகளை அவ்வளவு சுலபமாக பார்ப்பது கடினம். கடந்த 2012 ஆண்டு முதல் 2020 ஆண்டு வரையிலான கேமரா பதிவுகளில் சீகூர் மற்றும் நீலகிரி கிழக்கு சரிவு பகுதிகளில் காண முடிந்தது. ஆனால், 2019-20 கால கட்டத்தில் சீகூர் மற்றும் நீலகிரி கிழக்கு சரிவு பகுதிகளில் 13 ைஹனாக்கள் கேமிராக்களில் பதிவாகி உள்ளன. தற்போது இவற்றை மசினகுடி பகுதியில் அடிக்கடி காண முடிகிறது’’ என்றனர்.
இது குறித்து ஊட்டி அரசு கலைக் கல்லூரியின் வன விலங்கு உயிரியல் துறையின் உதவி பேராசிரியர் ராமகிருஷ்ணன் கூறுகையில், ‘‘இயற்கையின் படைப்பில் எல்லா உயிரினங்களும் உன்னதமானது. அதிலும் வனத்தின் தூய்மைப் பணியாளர்கள் என்று அழைக்கப்படும் கழுகு, நரி, கழுதைப்புலிகள் போன்றவை மிக மிக உன்னதமானவை. இவற்றுக்கு புலிகளைப் போன்று இறைச்சி தேவையில்லை.
அவை உண்டு மிச்சம் வைத்த எலும்புகள் இருந்தாலே போதும். அவற்றை உண்டு நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பதுடன், வனத்தையும் தூய்மையாக வைத்து கொள்ளும். வனத்தை ஒட்டிய பகுதிகளில் நடைபெற்ற கால்நடை வளர்ப்பால் அவற்றுக்கு கொடுக்கப்பட்ட வலி நிவாரணிகள் மற்றும் இறந்த கால்நடைகளின் இறைச்சியில் கலக்கப்பட்ட விஷம் போன்றவையும் இவற்றின் எண்ணிக்கையை வெகுவாகப் பாதித்தது. வனத்தில் பட்டி மாடுகள் வளர்ப்புக்கு தடை மற்றும் ஒன்றிணைந்த வனத்தை புலிகள் காப்பகமாக அறிவித்ததும் தற்போது இவற்றின் எண்ணிக்கையை மெல்ல அதிகரிக்கச் செய்துள்ளது. தற்போது முதுமலையில் 25 முதல் 30 வரை இவற்றின் எண்ணிக்கை இருக்க வாய்ப்புள்ளது’’ என்றார்.