×

பராமரிப்பின்றி உருக்குலைந்த மூன்றடைப்பு- மருதகுளம் சாலை

*வாகனஓட்டிகள் கடும் அவதி

நெல்லை : நெல்லை அருகே மூன்றடைப்பில் இருந்து மருதகுளத்திற்கு செல்லும் சாலை பராமரிப்பின்றி உருக்குலைந்துள்ளதால் கிராம மக்கள், வாகன ஓட்டிகள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரும் கடுமையாக அவதிப்படுகின்றனர். நெல்லை- கன்னியாகுமரி 4 வழிச்சாலையில் மூன்றடைப்பில் இருந்து 3 கிமீ தொலைவில் மருதகுளம் உள்ளது. இக்கிராமத்தில் 800க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றன. மருதகுளத்தின் அருகேயுள்ள பாக்கியநாதபுரம், ேதாட்டக்குடி, கோவைகுளம் கிராம மக்கள் மருதகுளம் சாலையை பயன்படுத்தியே நான்கு வழிச்சாலைக்கு வருகின்றனர். இதே போல் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரிக்கு செல்வோரும் இச்சாலையை பயன்படுத்துகின்றனர்.

இருந்தபோதும் முறையாகப் பராமரிப்பு மேற்கொள்ளப்படாத நிலையில் மூன்றடைப்பில் இருந்து மருதகுளத்திற்கு செல்லும் சாலையானது  உருக்குலைந்து போனது. குறிப்பாக தற்போது ராட்சத குழிகளோடு படுமோசமாக காட்சியளிக்கிறது. கடந்த இரு ஆண்டுகளாக இச்சாலை செப்பனிடப்படவில்லை. இந்த சாலையில் அதிக பாரம் ஏற்றி செல்லும் கனரக வாகனங்களால் சாலை பழுதடைந்துள்ளது. சாலையில் ஆங்காங்கே பாளம், பாளமாக ஜல்லிக்கற்கள் பெயர்ந்து காணப்படுகின்றன.

மருதகுளம் சுற்றுவட்டார பகுதி மக்கள் சாலையில் வாகனங்களை ஓட்டி வரும்போது மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
ஊரடங்கு இல்லாதபோது மருதகுளம், மலையன்குளம், கோவைகுளம் பஸ்கள் இச்சாலை வழியே செல்கின்றன. சாலையில் காணப்படும் பள்ளங்களால் பஸ்கள் தள்ளாடியபடியே செல்கின்றன. எனவே இச்சாலையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரிதமாக சீரமைத்து தர முன்வர வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Maruthakulam road , Nellai: Near Nellai, the road from Munrataippu to Maruthakulam has collapsed due to lack of maintenance.
× RELATED விவிபேட் சீட்டு வழக்கு: விசாரணைக்கு ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு