பல்ராம்பூர்: கங்கையில் ஆயிரக்கணக்கான பிணங்கள் மிதந்த நிலையில் உ.பி.யில் கொரோனா நோயாளி சடலத்தை ஆற்றில் வீசும் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா 2வது அலை தீவிரமடைந்த நிலையில், வடமாநிலங்களில் கோரத்தாண்டவம் ஆடியது. இதனால், அங்கு கொத்துக்கொத்தாக மக்கள் பலியானார்கள். டெல்லி, பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனாவால் இறந்தவர்களின் உடலை சுடுகாட்டில் எரியூட்ட வரிசையில் அணிவகுத்து காத்திருந்த அவலம் நேர்ந்தது. பல இடங்களில் பல மணி நேரம் காத்திருந்தும் இடமில்லாதால் ஏரி மற்றும் ஆற்றங்கரையோரத்தில் வரிசையாக விறகு கட்டை வைத்து சடலங்களில் எரிக்கப்பட்டது.
இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலத்தின் கங்கை ஆற்று கரையோரங்களில் ஆயிரக்கணக்கான பிணங்கள் மிதந்த சம்பவம் அம்மாநிலங்கள் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2 வாரங்களுக்கு முன் பீகாரின் கங்கை ஆற்றில் பிணங்களாக மிதந்தன. இது, கொரோனா தொற்று காரணமாக இறந்தவர்கள் உடல்களாக இருக்கலாம் என கூறப்பட்டது. இந்த விவகாரத்தில் பீகார் மற்றும் உத்தர பிரதேச மாநிலங்கள் பரஸ்பர குற்றச்சாட்டுகளை கூறின. இந்த சூழலில், உத்தர பிரதேச மாநிலத்தின் உன்னாவ் மாவட்டத்தின் இரண்டு இடங்களில் கங்கை ஆற்றின் கரையோரம் மணலில் ஏராளமான உடல்களை புதைக்கப்பட்டது தெரியவந்தது. இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, மத்திய அரசு குறிப்பிட்ட பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களுக்கு ஒரு உத்தரவு போட்டது. அதில், ஆற்றங்கரையில் சடலங்களை வீசப்படுவதில்லை என உறுதி செய்ய வேண்டும். வறுமை மற்றும் விழிப்புணர்வு இல்லாததால் பெருகி வரும் இந்த நடைமுறையை நிறுத்த நதிக்கரையோரங்களில் ரோந்துப் பணிகளை அதிகரிக்கவும் வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம், பல்ராம்பூர் மாவட்டத்தில் உள்ள ராப்டி ஆற்றில் கொரோனாவால் உயிரிழந்த ஒரு நோயாளியை 2 பேர் தூக்கி வீசும் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ அவ்வழியாக காரில் சென்றவர்கள் தங்களது செல்போனில் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இது, தற்போது வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், 2 பேர் கொரோனா நோயாளியின் சடலத்தை ஆற்றின் மேல் உள்ள மேம்பாலத்தின் தடுப்பு சுவரில் தூக்கி வைக்கின்றனர். இரண்டு பேரில் ஒருவர் பிபிஇ கிட் அணிந்துள்ளார். இருவரும் சேர்ந்து அந்த சடலத்தை ஆற்றில் வீசுகின்றனர். இருவரும் நோயாளிகளின் உறவினர்கள். இரண்டு பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர். இதுகுறித்து பல்ராம்பூர் தலைமை மருத்துவ அதிகாரி விஜய் பக்தூர் சிங் கூறுகையில், ‘‘ சித்தார்த்நகர் மாவட்டம், சோரட்கார் பகுதியை சேர்ந்த பிரேம் நாத் மிஸ்ரா கடந்த 25ம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 28ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொரோனா விதிமுறைகளின்படி அவரது உடல் உறவினர்களிடம் கொடுக்கப்பட்டது. அவரது சடலம்தான் ஆற்றில் வீசப்பட்டுள்ளது’’ என்றார்.