மதுரை: கொரோனா சிகிச்சை உபகரணங்கள், மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிப்பதற்கான மத்திய அரசு குழுவில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதாக தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தலைவர் ஜெகதீசன் விடுத்துள்ள அறிக்கை: கடந்த 28ம் தேதி நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், கொரோனா தடுப்பூசிகள், மருந்துகளுக்கான ஜிஎஸ்டியை ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களுக்கு தீர்வு காணப்படும் என தொழில் வணிகத்துறையினர் மிகவும் எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால் எந்தவொரு கோரிக்கையும் நிறைவேற்றப்படாதது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் கொரோனா சிகிச்சை உபகரணங்கள் மற்றும் மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரிவிலக்கு அளிப்பது தொடர்பாக தற்போது மத்திய அரசின் குழுவில் மேகாலயா, குஜராத், மகாராஷ்டிரா, கோவா, கேரளா, ஒடிசா, தெலங்கானா, உ.பி. ஆகிய மாநிலங்களுக்கு மட்டும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டு, தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இது தொழில்துறையினருக்கு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.