திருவனந்தபுரம்: லட்சத்தீவில் தற்காலிக நிர்வாகியாக நியமிக்கப்பட்ட குஜராத் முன்னாள் உள்துறை அமைச்சர் பிரபுல் கோடா பட்டேல் கொண்டு வந்த கெடுபிடி சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த நிலையில் லட்சத்தீவுக்கு இனிமேல் செல்ல வேண்டுமானால் அங்குள்ள கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட் அனுமதி வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது நேற்று முதல் அமலுக்கு வந்தது. ஏற்கனவே உரிய அனுமதியுடன் லட்சத்தீவுக்கு வந்தவர்கள் இன்னும் ஒருவார காலம் தங்கலாம். ஆனால் அதற்கு மேல் அதிக நாட்கள் தங்க விரும்பினால் கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட் அனுமதியை பெற வேண்டும்.
தீவிற்கு வந்து திரும்புபவர்களின் அனுமதி உரிமம் (பாஸ்) பதிவு அதிகாரி, காவல்துறை அல்லது நியமிக்கப்பட்ட அதிகாரிகளால் ரத்து செய்ய வேண்டும். மீண்டும் லட்சத்தீவுக்கு செல்ல வேண்டுமானால், புதிய அனுமதி பாஸ் வேண்டி கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை துறைத்தலைவர்கள், துணை ஆட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் மாஜிஸ்திரேட்டுக்கு சமர்ப்பிக்க வேண்டும். லட்சத்தீவில் உள்ள துறைமுகங்கள், படகு குழாம்கள், கப்பல்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய உளவுத்துறை உத்தரவை தொடர்ந்து, பாதுகாப்பை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இதையடுத்து ரோந்து, கப்பல் போக்குவரத்துக்கு கட்டுப்பாடு, பயணிகளிடம் சோதனை, கப்பல்களில் ஆய்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரள சட்டசபையில் இன்று தீர்மானம்
பிரபுல் கோடா பட்டேலின் கெடுபிடி சட்டங்களுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ராகுல் காந்தி,ேகரள முதல்வர் பினராய் விஜயன் உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் லட்சத்தீவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து ேகரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது. இன்று இது தொடர்பான தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. காங்கிரஸ் கூட்டணியும் ஆதரவு தெரிவித்துள்ளதால் இந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்படும்.