பெங்களூரு: பலாத்கார வழக்கில் இந்தி நடிகை கங்கனா ரனாவத்தின் மெய்காப்பாளரை மும்பை போலீசார் மண்டியாவில் கைது செய்துள்ளனர். இந்தி நடிகை கங்கனாரனாவத்தின் பாதுகாவலராக பணியாற்றி வந்தவர் குமார் ெஹக்டே. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் மும்பையில் இருந்தபோது இளம் பெண் ஒருவரை காதலித்து, திருமண ஆசை காட்டி உல்லாசம் அனுபவித்துள்ளார். பின்னர் திருமணம் செய்து கொள்ளாமல், தலைமறைவாகி, வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சி மேற்கொண்டார். இதனால் விரக்தியைடைந்த பாதிக்கப்பட்ட பெண் மும்பை அந்தேரி போலீசில் புகார் அளித்தார்.
வழக்கு பதிவு செய்த அந்தேரி போலீசார், அவரை தேடி வந்தனர். இந்நிலையில் மும்பை போலீசாருக்கு அவர் குறித்த தகவல் கிடைத்தது. அதாவது குமார் கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் கே.ஆர் பேட்டை கிக்கேரி சரகத்திற்குட்பட்ட ஹூக்கடஹள்ளி கிராமத்தில் தலைமறைவாக இருந்துள்ளார். இதையடுத்து மண்டியா வந்த மும்பை போலீசார், கிக்கேரி போலீஸ் உதவியுடன் குமார் ஹக்டேவை தேடி கண்டுபிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை கே.ஆர் பேட்டை சிவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பாடிவாரண்ட் பேரில் மும்பைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கைது நடவடிக்கை மும்பை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.