சென்னை: கொரோனா தொற்று ஏற்பட்டு பலியாகும் வக்கீல்களின் குடும்பத்திற்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு வக்கீல்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து வக்கீல்கள் சங்க செயலாளர் கிருஷ்ணகுமார் கூறும்போது, கொரோனா தாக்கத்தால் இளம் வழக்கறிஞர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். நீதிமன்றங்கள் முழு அளவில் செயல்படாததால் வழக்குகள் இல்லாமல் வக்கீல்கள் அன்றாட வாழ்க்கையையே நடத்த முடியாமல் இருக்கிறார்கள். இந்நிலையில், வக்கீல்களுக்கும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம். வக்கீல்கள் மற்றும் பொதுமக்கள் மீதான போலி முகநூல் மற்றும் இணையவழி குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஒரு தனி அமைப்பை உருவாக்க வேண்டும். கொரோனா தொற்றால் ஏராளமான வக்கீல்கள் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவால் உயிரிழக்கும் நீதிபதிகளுக்கு இழப்பீடு வழங்குவதைப்போல் கொரோனாவால் உயிரிழக்கும் வக்கீல்களின் குடும்பத்தினருக்கும் அரசு இழப்பீடு வழங்க வேண்டும். வக்கீல்களுக்கான சேமநல நிதியை ரூ.10 லட்சமாக அதிகரித்து அரசு அறிவிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.