சென்னை: தென்மேற்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் அணைகளில் பராமரிப்பு பணியை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஜூன் முதல் வாரத்தில் மழை பொழிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், மாநிலம் முழுவதும் அணைகளில் பராமரிப்பு பணியை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை பராமரிப்பு செலவில் இருந்து மேற்கொள்ளவும் கோட்ட பொறியாளர்களுக்கு நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் அறிவுரை வழங்கியுள்ளார். அணைகளில் மதகுகள் சரியாக இயங்குகிறதா, கரை பலப்படுத்துவது அவசியமா என்பது குறித்து ஆய்வு செய்து அவற்றை சரி செய்யப்படவுள்ளது. இப்பணிகளை இந்த வாரத்திற்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்காக பணிகளை கண்காணிக்க நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, அணைகள் பாதுகாப்பு மற்றும் இயக்குனரக தலைமை பொறியாளர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமையிலான பொறியாளர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் அணைகள் முறையாக பராமரிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.