சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் 60 தன்னார்வலர்களை கொண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமையில் இருக்கும் 2,480 பேருக்கு காலை, மதியம், இரவு என 3 வேளைகள் உணவு அவர்கள் வீட்டிற்கு அளிக்கும் திட்டத்தையும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் வெண்டிலேட்டர் வசதியுடன் 120 படுக்கைகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மக்கள் பயன்பாட்டுக்கு நேற்று துவக்கி வைத்தார். அப்போது அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை பெற்று வரும் 2,480 பேருக்கு வீடுகள் தோறும் சென்று 3 வேளை உணவு அளிப்பது என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதில் 2 வேளை உணவு புரோட்டின் அதிகமுள்ள உணவாகவும், டாக்டர்களின் ஆலோசனை பெற்ற உணவாகவும் இருக்கும். இதில் சைதாப்பேட்டை தொகுதியை சேர்ந்த 100 களப்பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபடுகின்றனர்.
கோவையை பொறுத்தவரை கொரோனா பாதிப்பு அதிகரிக்கிறது என்பது உண்மை. அங்கே செயல்படுகிற ஆலைகள், பக்கத்து மாநிலங்களுக்கு சென்று வரும் பணியாளர்கள் என பல்வேறு பிரச்னைகளை நிர்வாக ரீதியாக சொன்னாலும், அதனை கட்டுப்படுத்த முதன்மை செயலாளர் பொறுப்பில் உள்ள தனி அலுவலர் கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்.கிராமபுறங்களில் இளைஞர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன் வருகின்றனர். மத்திய அரசிடம் ரூ.85.47 கோடி கொடுத்து 26 லட்சம் தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய இருக்கிறோம். அதில் இதுவரை 13.5 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளது.
முதல் அலையை விட, 2-வது அலையில் கொரோனா பாதிப்பு வேகம் அதிகரித்துள்ளது. அந்தவகையில் கிராம புறங்களில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களை கண்டறிந்து ஆய்வு செய்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வேகமாக சரிந்து கொண்டிருக்கிறது. இந்தியாவிலேயே ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் அதிகம் உள்ள மாநிலம் , அதிக ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை மேற்கொள்வதும் தமிழகம் என்று ஐ.சி.எம்.ஆர். கூறியுள்ளது. தமிழக்தி்ல ஒரு நாளைக்கு 1.70 லட்சத்துக்கு மேல் பரிசோதனை செய்யப்படுகிறது என்றார்.