போர்டோ: கால்பந்து உலகம் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் இறுதி ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி - செல்சீ அணிகள் இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு தாண்டி 12.30க்கு மோதுகின்றன.
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அதன் இறுதிப்போட்டி போர்ச்சுகல் நாட்டில் உள்ள போர்டோ நகரில் நடைபெற உள்ளது. இதில் மான்செஸ்டர் சிட்டி - செல்சீ அணிகள் மோதுகின்றன. இந்த 2 அணிகளும் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவை.
தலா 2 ஆட்டங்கள் கொண்ட அரையிறுதியில் மான்செஸ்டர் சிட்டி 4-1 என்ற கோல் கணக்கில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி, பிரான்ஸ்) அணியை வீழ்த்தி இறுதி ஆட்டத்திற்கு முன்னேறியது. அதேபோல் செல்சீ அணி 3-1 என்ற கோல் கணக்கில் ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்) அணியை வீழ்த்தி இறுதி ஆட்டத்திற்கு தகுதிப் பெற்றது. நடப்பு சாம்பியனான பேயர்ன் மியூனிக் (ஜெர்மனி) காலிறுதி சுற்றிலேயே பிஎஸ்ஜி அணியிடம் தோற்று வெளியேறியது. ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதி ஆட்டத்திற்கு முதல்முறையாக மான்செஸ்டர் சிட்டி முன்னேறியுள்ளது. இதில் வென்று சாம்பியன்கள் பட்டியலில் இடம் பிடிக்க மான்செஸ்டர் சிட்டி வேகம் காட்டும். இந்த ஆண்டு இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கோப்பையை வென்றதும் அந்த அணிக்கு கூடுதல் உற்சாகத்தை கொடுத்துள்ளது.
செல்சீ 3வது முறையாக சாம்பியன்ஸ் லீக் பைனலில் விளையாட உள்ளது. 2008ல் இங்கிலாந்தைச் சேர்ந்த மான்செஸ்டர் யுனைட்டட் அணியிடம் தோற்று 2வது இடத்தை பிடித்த செல்சீ, 2012ல் பேயர்ன் மியூனிக் (ஜெர்மனி) அணியை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. 2வது முறையாக கோப்பையை கைப்பற்ற செல்சீ அணியும், முதல்முறையாக கோப்பையை வெல்ல மான்செஸ்டர் சிட்டியும் வரிந்துகட்டுவதால் பைனலில் விறுவிறுப்பும், வேகமும் அதிகமாக இருக்கும்.