கொல்கத்தா: மேற்கு வங்கத்தை உலுக்கிய நாரதா ஊழல் வழக்கில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர் பிர்ஹாத் ஹகிம், சுப்ரதா முகர்ஜி, எம்எல்ஏ மதன் மித்ரா, கொல்கத்தா முன்னாள் மேயர் சோவன் சாட்டர்ஜி உள்ளிட்ட 4 பேரை கடந்த 17ம் தேதி சிபிஐ கைது செய்தது. வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டுள்ள இவர்கள் ஜாமீன் கோரி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான 5 பேர் கொண்ட அமர்வு, வீட்டு காவலில் உள்ள 4 பேருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. 4 பேரும் அபராத தொகை தலா ரூ.2 லட்சம் செலுத்த வேண்டும். இந்த வழக்கு தொடர்பாக ஊடகங்கள் மற்றும் பொதுமக்களிடம் எந்த கருத்தும் தெரிவிக்கக்கூடாது. சிபிஐ அதிகாரிகள் விசாரணை எப்போது அழைத்தாலும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என நீதிபதிகள் நிபந்தனை விதித்துள்ளனர்.