ஓசூர் : ஓசூர் அருகேயுள்ள கூப்பலிகுட்டா பகுதியில் 1500 குடியிருப்புகள் உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக, இங்குள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் பணியாற்றிய தொழிலாளர்கள், வீடுகளை காலி செய்து விட்டு தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி உள்ளனர். இந்நிலையில், இந்த குடியிருப்பு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு\ முன், மருத்துவமனைகளில் பயன்படுத்திய ஊசிகள் மற்றும் கையுறை, மருந்துகள், டெஸ்ட் டியூப்கள் என குவியல், குவியலாக போடப்பட்டுள்ளது.
இதை கண்ட பொதுமக்கள், அருகில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். குடியிருப்புகள் முன் கொட்டப்பட்டு கிடக்கும் இந்த மருத்துவ கழிவுகளால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, சுகாதார துறையினர் குப்பையில் வீசப்பட்டுள்ள மருத்துவ கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும். மேலும், இதுபோல் மருத்துவ கழிவுகளை கொட்டுபவர்களை கண்டறிந்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.