சென்னை: எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்ற தலைமை எழுத்தரிடம், அம்பத்தூர் வரதராஜபுரத்தை சேர்ந்த சுதர்சன் (35) கடந்த 24ம் தேதி தனக்கான பணி நியமன ஆணையை கொடுத்துள்ளார். அது போலி என தெரியவந்தது. இதுபற்றி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சுதர்சனிடம் நடத்திய விசாரணையில், வேலூர் மாவட்டம் வாலாஜா பகுதியை சேர்ந்த ராஜசேகர் (35) என்ற வழக்கறிஞர், தனக்கு பணி நியமன ஆணையை கொடுத்தார். இதற்காக அவர் தன்னிடம் ₹3.5 லட்சம் வாங்கியதாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் ராஜசேகரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, இதுபோல் பலரிடம் பல லட்சம் மோசடி செய்ததும், இவர் வழக்கறிஞர் இல்லை என்றும் தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார், சுதர்சன் மற்றும் ராஜசேகர் ஆகியோரை கைது செய்து, அரசு முத்திரைகள் மற்றும் பிரின்டர், கம்ப்யூட்டர், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.