லக்னோ: குற்றவழக்கில் கைதான 2 பஞ்சாயத்து தலைவர்கள் உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் சிறைக்குள் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர். உத்தரபிரதேச மாநிலம் மண்ட்வாடா பஞ்சாயத்து தலைவர் பைஸ் முகமது உள்ளிட்ட சிலர், தடை உத்தரவுகளை மீறி கடந்த சில நாட்களுக்கு முன் ஊர்வலம் சென்றதாகவும், அவர்கள் பொது அமைதியை கெடுக்கும் வகையில் வன்முறையை ஏற்படுத்தியதாகவும் போலீசார் வழக்குபதிவு செய்தனர். இவ்விவகாரத்தில் பைஸ் முகமது உள்ளிட்ட 20 பேர் கைது செய்யப்பட்டு முசாபர்நகர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர். இதேபோல், மற்றொரு பஞ்சாயத்து தலைவர், வார்டு உறுப்பினர்களும் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக கூறி சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர்.
அதன்படி, 2 பஞ்சாயத்து தலைவர்கள் உட்பட சில வார்டு உறுப்பினர்கள் சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்கள். இவர்கள் சிறையில் இருப்பதால், இன்னும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ளவில்லை. ஜாமீனிலும் வெளியே வரமுடியாததால், புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து தலைவர்கள் உள்ளிட்டோர் சிறைக்குள் இருந்தவாேற சிசிடிவி கேமரா மூலம் ஆன்லைனில் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர். இவர்களுக்கு அதிகாரிகள் பதவி பிரமாணம் செய்து வைத்ததாக முசாபர்நகர் மாவட்ட சிறை அதிகாரி கமலேஷ் சிங் தெரிவித்தார்.