சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: மின்சாரத்தை நமக்கு தொடர்ந்து வழங்கி கொண்டிருப்பதில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் மின்சார வாரிய பணியாளர்கள், கொரோனா நோய் தொற்றால் 200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை முன்களப்பணியாளர்களாக அறிவித்து அவர்களுக்கு பல்வேறு சலுகைகளை அரசு வழங்கிவருகிறது. ஆனால் மின்சார வாரியத்தில் பணிபுரியும் பணியாளர்கள் முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்படாததால் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழக்கும் பணியாளர்களுக்கு எவ்விதச் சலுகையும் கிடைப்பதில்லை.
மேலும் கொரோனா தொற்று நோய் பாதிப்புக்கு உள்ளாகி இயற்கை எய்தும் மின்வாரியப் பணியாளர்களுக்கு ₹25 லட்சம் நிதியுதவி வழங்கும் திட்டத்தை குஜராத் அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது. எனவே மின்சார வாரியத்தில் பணிபுரியும் பணியாளர்களின் அர்ப்பணிப்பு உணர்வை கருத்தில் கொண்டு அவர்களை முன்களப்பணியாளர்களாக அறிவிக்கவும், சலுகைகள் கிடைக்கவும் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.