×

சமூக வலைத்தளங்களில் பாலியல் ஆசிரியர் உறவினர் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குறித்து அவதூறு பதிவு: போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திமுக புகார்

சென்னை: பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் உறவினர் என்று சமூக வலைத்தளங்களில் அவதூறாக கருத்து பதிவு செய்து வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திமுக வழக்கறிஞர் அணி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திமுக தலைமை கழக வழக்கறிஞர் சூர்யா வெற்றிக்கொண்டான் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

சென்னையில் உள்ள ஒரு பிரபலமான பள்ளியின் ஆசிரியர் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டு அதன் மீது காவல் துறை நடவடிக்கை எடுத்து அவரை போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளது. இந்நிலையில்,  நாராயணன் சேஷாத்திரி என்பவர் கைது செய்யப்பட்ட ராஜகோபாலன் என்ற ஆசிரியர் திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு சொந்தக்காரர். அதனால் இந்த கேஸை மூடி மறைத்து விடுவார்கள் என்று ஒரு சமூக வலைத்தளத்தில் தன்னுடைய கூற்றுக்கு முகாந்திரமும் இல்லாமல் தன் கூறுவது பொய் என்று உணர்ந்தோ அல்லது அதன் உண்மை குறித்து ஆராயாமலோ தன்னுடைய சித்தாந்தத்திற்கு எதிர் கருத்து கொண்டவர் என்ற ஒரே காரணத்திற்கான எங்கள் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பெயரை கெடுக்கும் எண்ணத்தோடு இவ்வாறு பதிவிட்டுள்ளார்.  

கைது செய்யப்பட்ட ஆசிரியர் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் உறவினர் என்பதும் பொய். அதேபோல் அப்படி அவர் உறவினர் என்பதால் தமிழக அரசு இந்த வழக்கை மூடி மறைக்கும் என்பதும் அவர் மீது நடவடிக்கை எடுக்காது என்பதும் கீழ் தரமான அவதூறு என்பதோடு அல்லாமல் ஆட்சியின் மீதும் எங்கள் கட்சியின் மீதும் வேண்டுமென்றே பரப்பப்படும் பொய் குற்றச்சாட்டு மற்றும் மக்களிடையே கட்சி மற்றும் ஆட்சியாளர்கள் மேல் அவநம்பிக்கையை உருவாக்க கையாளப்படும் உத்தி.

எனவே போலீஸ் கமிஷனர் அவர்கள் மேற்கூறிய நாராயணன் சேஷாத்திரி மற்றும் அதனை பின்பற்றி சமூக வலைத்தளங்களில் மீள் பதிவு செய்தோர் மீதும் உடனடி நடவடிக்கை எடுத்து இந்த பதிவுகளை நீக்குவதோடு அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags : Bharati , DMK secretary RS Bharathi's defamatory post on social media
× RELATED வெள்ளிங்கிரி மலையில் ஏறிய 3 பக்தர்கள் மூச்சுத்திணறி பலி