தண்டையார்பேட்டை: வடமாநிலத்தில் கொரோனா சிகிச்சை மையத்தில் தீ விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டது. இதுபோல் தமிழகத்தில் நடைபெறாமல் இருக்க தமிழக தீயணைப்புத்துறை இயக்குனர் சைலேந்திரபாபு ஆணைக்கிணங்க வடக்கு மண்டல இணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன் உத்தரவின்பேரில் வடசென்னை மாவட்ட அலுவலர் ராஜேஷ் கண்ணன் வழிகாட்டுதலின்படி அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் தீயணைப்பு துறை சார்பில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், தீயணைப்பு அதிகாரி கண்ணன் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் மருத்துவர்கள் செவிலியர்கள் எப்படி தீ விபத்தில் இருந்து காத்து கொள்வது அதை எவ்வாறு அணைக்க வேண்டும் என்பதை எடுத்துரைத்தார். இதில் ஸ்டான்லி மருத்துவமனை நிலைய அதிகாரி ரமேஷ், போக்குவரத்து காவலர் செந்தில்குமார் மற்றும் தீயணைப்பு துறை சேர்ந்தவர்கள் உடனிருந்தனர். இதேபோல் தண்டையார்பேட்டை கைலாசம் தெருவில் உள்ள அரசு புறநகர் மருத்துவமனையில் தீ விபத்து ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட உதவி அலுவலர் சுப்பிரமணியன் தண்டையார்பேட்டை தீயணைப்பு நிலைய அதிகாரி பரமேஸ்வரன் உள்ளிட்ட அதிகாரிகள் மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் தீ விபத்து குறித்த பயிற்சி அளித்தனர்.