சென்னை: பிரதமராக மோடி பதவியேற்று 7 ஆண்டு நிறைவு பெறுவதையடுத்து நேற்று கருப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. டெல்லியில் விவசாயிகள் ஆறு மாத காலம் போராடியும் அவர்களது பிரச்னைகளை தீர்க்க தவறிய மோடி அரசை கண்டித்தும், மோடி பதவியேற்று ஏழு ஆண்டுகள் நிறைவு பெறும் தினமான மே 26 நேற்று நாடு முழுவதும் “கருப்பு தினம்” கடைபிடிக்கும் வகையில் பொதுமக்கள் தங்களது இல்லங்களில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் நேற்று கருப்புக் கொடி ஏற்றி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.