சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகள், சிகிச்சை மையங்கள் மற்றும் பொது மருத்துவம் செய்யும் மருத்துவர்கள் கோவிட் தொற்று அறிகுறி உள்ள நபர்கள் குறித்த விவரங்களை மாநகராட்சிக்கு தெரிவிக்காவிட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தனியார் மருத்துவமனைகள் அல்லாமல் தனியார் சிகிச்சை மையங்கள் மற்றும் பொது மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களிடம் கோவிட் தொற்று அறிகுறியுள்ள நபர்கள் சிகிச்சை பெறுவதாகவும், அது குறித்த தகவல்கள் மாநகராட்சியின் கவனத்துக்கு வருவதில்லை என தெரியவருகிறது.
எனவே சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகள், சிகிச்சை மையங்கள் மற்றும் பொது மருத்துவம் செய்யும் மருத்துவர்கள் தங்களிடம் சிகிச்சை பெற வரும் நபர்களில் கோவிட் தொற்று அறிகுறி உள்ள நபர்கள் அல்லது கோவிட் தொற்று உள்ளவராக சந்தேகிக்கப்படும் நபர்கள் குறித்த தகவல்களை நாள்தோறும் கீழ்க்காணும் அட்டவணையின்படி gccpvthospitalreports@chennaicorporation.gov.in எஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் வ.எண், பெயர்,முகவரி, கைபேசி எண்,அறிகுறிகள் இது தொடர்பாக தனியார் மருத்துவமனைகள், சிகிச்சை மையங்கள் மற்றும் பொது மருத்துவம் செய்யும் மருத்துவர்களுடன் ஒருங்கிணைந்து தகவல்களை பெற மாநகராட்சியின் சார்பில் பூச்சியியல் வல்லுநர்களை கொண்ட 15 ஒருங்கிணைப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தனியார் மருத்துவமனைகள், சிகிச்சை மையங்கள் மற்றும் பொது மருத்துவம் செய்யும் மருத்துவர்கள் கோவிட் தொற்று அறிகுறியுள்ள நபர்களின் விவரங்களை மாநகராட்சிக்கு தெரிவிக்க தவறினால் பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 பிரிவு 51ன் படி சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.