திண்டுக்கல்/சின்னாளபட்டி : திண்டுக்கல் மாவட்டத்தில் முழு ஊரடங்கை முன்னிட்டு காய்கறிகள் வீடு தேடி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தமிழகத்தில் முழு ஊரடங்கால் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் தோட்டக்கலை துறை மற்றும் கூட்டுறவுத் துறை இணைந்து 233 நடமாடும் வாகனங்களில் காய்கறி விற்பனையை துவக்கினர். இந்த வாகனங்கள் திண்டுக்கல் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகள், கிராம பகுதிகள் உட்பட அனைத்து பகுதிகளிலும் விற்பனை செய்து வருகின்றன.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஞாயிறு, திங்கள் கிழமைகளில் காய்கறி விலை கடுமையாக இருந்தது. தக்காளி கிலோ ரூ.50, கத்தரிக்காய் ரூ.100, அவரைக்காய் ரூ.100, சின்ன வெங்காயம் ரூ.75 என விற்பனையானது. இந்நிலையில் நேற்று காய்கறியின் விலை சரிந்தது. தக்காளி கிலோ ரூ.20, கத்திரிக்காய் ரூ.44, வெண்டைக்காய் ரூ.25, முருங்கை ரூ.30, முள்ளங்கி ரூ.20, மிளகாய் ரூ.40, அவரை ரூ.50, கொத்தவரங்காய் ரூ.18, பாகற்காய் ரூ.30, சின்ன வெங்காயம் ரூ.48க்கு விற்பனை செய்யப்பட்டது. விலை குறைவால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் வாகனங்களில் காய்கறி விற்பனை சூடுபிடித்துள்ளது.
ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கே.புதுக்கோட்டையில் துணை தோட்டக்கலை அலுவலர் கவுதமன், உதவி தோட்டக்கலை அலுவலர் முருகேசன் ஆகியோர் நடமாடும் காய்கறி விற்பனையை துவக்கி வைத்தனர். நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் காமாட்சியப்பன் தலைமை தாங்கினார். ஒன்றியகுழு உறுப்பினர் நாகலெட்சுமி ரமேஷ் முன்னிலை வகித்தார்.
ரெட்டியார்சத்திரம் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் தாயமுத்து, ரெட்டியார்சத்திரம் ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ரமேஷ், தகவல் தொழில்நுட்ப அணி மகேந்திரன், கிளைச்செயலாளர்கள் கோவிந்தராஜ், சக்திவேல், அழகு கணேசமூர்த்தி உட்பட திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
சின்னாளபட்டி சிறப்புநிலை பேரூராட்சியில் திண்டுக்கல் மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ராஜா துவக்கி வைத்து, காய்கறி வண்டிகளின் ஓட்டுநர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு கபசுர குடிநீர், சானிடைசர், முககவசம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் கலையரசி, தலைமை எழுத்தர் கலியமூர்த்தி, துப்புரவு ஆய்வாளர் கணேசன், துப்புரவு மேற்பார்வையாளர்கள் தங்கத்துரை, அகிலன், சரவணன், எழுத்தர் ராமமூர்த்தி, வரிவசூலர் குணசேகரன், மற்றும் பலர் கலந்துகொண்டனர்.