நாகை : நாகை நகராட்சி எல்லை பகுதிகளில் நடமாடும் காய்கறி, பழங்கள், மளிகை விற்பனை செய்யும் வாகனத்தை நாகை நகராட்சி அலுவலகத்தில் இருந்து கலெக்டர் பிரவீன்பிநாயர் நேற்று தொடங்கி வைத்தார்.கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது.
இதையடுத்து பொதுமக்களுக்கு தேவையான காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வசிப்பிடங்களிலேயே விற்பனை செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி நாகை நகராட்சி எல்லையில் வசிப்பவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க நாகை நகராட்சி சார்பில் பாஸ் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பாஸ் பெற்றவர்கள் தங்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட பகுதிகளில் சென்று அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் வகையில் நாகை நகராட்சி அலுவலகத்தில் இருந்து நடமாடும் காய்கறி, மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் வாகனத்தை கலெக்டர் பிரவின்பிநாயர் தொடங்கி வைத்தார். நகராட்சி ஆணையர் ஏகராஜ், தாசில்தார் ஜெயபாலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.