கொடைக்கானல்: கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் வண்ண மலர்களால் கொரோனா வைரஸ், தடுப்பூசி, மாஸ்க் விழிப்புணர்வு அலங்காரம் அமைக்கப்பட்டுள்ளது. மலைகளின் இளவரசி கொடைக்கானலில் தற்போது கோடை சீசன் காலம். கொரோனா தொற்று காரணமாக இந்த சீசன் காலத்தில் நடைபெற வேண்டிய மலர் கண்காட்சி, கோடை விழா உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சுற்றுலாப்பயணிகள் கொடைக்கானலுக்கு அனுமதிக்கப்படவில்லை. இதனால் அங்குள்ள பிரையண்ட் பூங்காவில் பூத்துள்ள பல லட்சம் வண்ண மலர்கள் ரசிப்பதற்கு ஆள் இன்றி வாடுகின்றன. மேலும் கோடை விழாவிற்காக பிரையண்ட் பூங்காவில் கொரோனா விழிப்புணர்வு மலர் கண்காட்சி அமைக்கப்பட்டது. பல லட்சம் வண்ண மலர்கள் கொண்டு கொரோனா வைரஸ், தடுப்பூசி, மாஸ்க் ஆகிய அலங்காரங்கள் அமைக்கப்பட்டன. தடுப்பூசியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வாசகங்களும் இடம்பெற்றிருந்தன. சுற்றுலாப் பயணிகள் வராததால் பூங்கா பணியாளர்களே இவற்றை தினமும் ரசிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.