சென்னை: சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்காக கண்டலேறு அணையில் இருந்து ஜூன் 10ம் தேதி தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட ஆந்திர அரசு முடிவு செய்து இருப்பதாக தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தெலுங்கு- கங்கா திட்ட ஒப்பந்தப்படி தமிழகத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் 12 டிஎம்சி நீர் ஆந்திர அரசு தர வேண்டும். இதனால், கடந்த தவணை காலத்தில் 7.6 டிஎம்சி மட்டுமே தமிழகத்துக்கு கிடைத்தது. இதனால் நிலுவையில் உள்ள 4.4 டிஎம்சி தண்ணீர் தர வேண்டும். எனவே, தமிழகத்துக்கு வர வேண்டிய 4.4 டிஎம்சி கிருஷ்ணா நீரை பெற நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசு நீர்வளத்துறைக்கு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து நீர்வளத்துறை சென்னை மண்டல தலைமை பொறியாளர், ஆந்திர நீர்வளத்துறை தலைமை பொறியாளருக்கு கடிதம் எழுதினார்.
தற்போது கண்டலேறு அணையில் 45 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது.தெலுங்கு கங்கா திட்ட ஒப்பந்தப்படி 8 டிஎம்சிக்கு மேல் நீர் இருந்தால் தண்ணீர் திறந்து விடலாம். எனவே, தமிழக அரசு கோரிக்கை தொடர்பாக ஆந்திர அரசிடம் அங்குள்ள நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதை தொடர்ந்து, கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு ஜூன் 10ம் தேதியில் தண்ணீர் திறந்து விட ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக ஆந்திர நீர்வளத்துறை அதிகாரிகள் தமிழக நீர்வளத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.