சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது: மக்கள் நீதி மய்யத்தில் புதுமுகங்களை களம் இறக்கி, அவர்களை மின்ன வைத்ததுதான் சிலருக்கு சர்வாதிகாரமாக தெரிகிறது. தோல்விக்கு பிறகு அவரவர் கடமைகளை ஏற்பதுதான் நல்ல ஜனநாயகம். தோல்விக்கு பிறகு நிகழ்ந்துவிட்ட தவறுகளை கொட்ட குழி தேடுவது சிலருக்கு ஜனநாயகமாக படுகிறது.
அது ஜனநாயகம் அல்ல. யார் வெளியேறினாலும் மக்கள் நீதி மய்யம் என்ற கிணறு தூர்ந்துபோய் விடாது என்பது சற்று நேர தாகத்துக்கா குடிக்க வந்தவர்களுக்கு புரியாது. நாடோடிகள், யாத்ரீகர்கள் ஓரிடத்தில் இருக்க மாட்டார்கள். வணிகர்களாக இருக்கும்பட்சத்தில் வியாபாரம் உள்ளவரை தங்குவார்கள்.பிறகு வெளியேறிவிடுவார்கள். நம் கட்சியை தங்களது ஆதாயத்துக்காக அவர்கள் மாற்றி ஆடிய விளையாட்டுகள் இனி தொடராது. செயல்வீரர்களின் கரங்கள் வலுப்படுத்தப்படும். உயிருள்ள வரை நான் அரசியலில் இருப்பேன். அரசியல் இருக்கும் வரை மக்கள் நீதி மய்யம் இருக்கும். இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.