டாக்கா: வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி அங்கு 3 ஆட்டங்களை கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது . டாக்காவில் நேற்று முன்தினம் முதல் ஆட்டம் நடந்தது. முதலில் விளையாடிய வங்கதேசம் 6 விக்கெட் இழப்புக்கு 257ரன் குவித்தது. அந்த அணியின் முஷ்பிகுர் 84, மகமதுல்லா 54ரன் குவித்தனர். இலங்கையின் தனஞ்ஜெயா 3 விக்கெட் எடுத்தார். தொடர்ந்து விளையாடிய இலங்கை 48.1ஓவர் முடிவில் எல்லா விக்கெட்களையும் இழந்து 224ரன் மட்டுமே எடுத்தது. அதனால் வங்கதேசம் 33 ரன் வித்தியாசத்தில் வென்றது.
அந்த அணியின் மிராஸ் 4, முஷ்டாபிசூர் 3 விக்கெட் சுருட்டினர். இலங்கை தரப்பில் போராடிய ஹசரங்கா 74ரன் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் வங்கதேசம் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த இரு அணிகளும் மோதும் 2வது ஒருநாள் ஆட்டமும் டாக்காவில் இன்று நடக்கிறது. உள்ளூரில் தொடர்ந்து தொடர்களை வென்று வரும் வங்கதேசம் இன்றைய போட்டியில் வென்று தொடரை கைப்பற்ற முயற்சி செய்யும். அதற்கு ஏற்ப தமீம் இக்பால் தலைமையிலான வங்கதேச அணி வலுவாகவே உள்ளது.
அதே நேரத்தில் முதல் வெற்றிக்காக இலங்கை இன்று போராட உள்ளது. அதற்கேற்ப அந்த அணியில் மாற்றங்கள் இருக்கும். புதுவீரர்கள் இருந்தும் முதல் ஆட்டத்தில் யாரும் அறிமுகமாகவில்லை. அதனால் குசால் பெரேரா தலைமையிலான இலங்கை அணியில் இன்று புது வீரர்கள் அறிமுகமாகக் கூடும்.