திருவாரூர்: திருவாரூரில் நடிகர் சந்தானத்தின் உறவுக்கார பெண் வேன் ஏற்றி கொலை செய்யப்பட்டார். வெளிநாட்டில் உள்ள கணவரே கொலைக்கு ஏற்பாடு செய்தது அம்பலமானதால் அவரது உறவினர்களான 2 அரசு பஸ் டிரைவர்கள் உள்பட 4 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.திருவாரூர் கிடாரங்கொண்டானை சேர்ந்த சிதம்பரம் மகள் ஜெயபாரதி(30). இவருக்கும், தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த விஷ்ணுபிரகாஷ் (35) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் விஷ்ணுபிரகாஷ், திருமணமானவுடன் மனைவியை தன்னுடன் அழைத்து சென்றுவிட்டார். இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளார்.
இந்தநிலையில், தம்பதி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் விஷ்ணுபிரகாஷ், மனைவி மற்றும் குழந்தையை கிடாரங்கொண்டானுக்கு அனுப்பி விட்டார். தந்தை வீட்டில் மகளுடன் வசித்து வந்த ஜெயபாரதி, ஆந்தக்குடியில் உள்ள தபால் நிலையத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார். வழக்கம்போல் கடந்த 21ம் தேதி மாலை, ஜெயபாரதி பணி முடிந்து டூவீலரில் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது கடுவையாறு பாலம் அருகே வந்தபோது எதிரே வந்த ஏடிஎம்முக்கு பணம் நிரப்பும் வாகனம், டூ வீலர் மீது மோதியதில் ஜெயபாரதி படுகாயமடைந்தார்.
திருவாரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் அன்றிரவே சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஜெயபாரதியின் தந்தை சிதம்பரம், திருவாரூர் தாலுகா போலீசில் நேற்றுமுன்தினம் புகார் கொடுத்தார். அதில், வேண்டுமென்றே விபத்து ஏற்படுத்தப்பட்டு மகள் கொலை செய்யப்பட்டதாகவும், இந்த வழக்கை தீவிர விசாரித்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து கும்பகோணத்தை சேர்ந்த டிரைவர் பிரசன்னாவை(22) கைது செய்து விசாரணை நடத்தியதில், வெளிநாட்டிலிருந்தே விஷ்ணுபிரகாஷ் போன் மூலம் உறவினர்களிடம் பேசி மனைவியை வாகனம் ஏற்றி கொன்றது தெரியவந்தது.
இதையடுத்து விபத்து வழக்கை கொலை வழக்காக பதிவு செய்த போலீசார், வேன் உரிமையாளர் திருவாரூர் பவித்ரமாணிக்கத்தை சேர்ந்த செந்தில்குமார் (32), அவரது உறவினர்களான அரசு பஸ் டிரைவர்கள் ராஜா (47), ஜெகன் (37) ஆகிய 3 பேரை நேற்று கைது செய்தனர். இதுதொடர்பாக 3 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் தலைமறைவான மற்றொரு செந்தில்குமாரை போலீசார் தேடி வருகின்றனர். ஜெயபாரதியின் சகோதரரான கார்த்தி, திரைப்பட நடிகர் சந்தானத்தின் உறவுக்கார பெண்ணை மணந்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஜெயபாரதியின் பெரியப்பா சுப்ரமணி ஓய்வு பெற்ற ஏடிஎஸ்பி ஆவார்.