புதுடெல்லி: டெல்லியை சேர்ந்த 23 வயது இளம் மல்யுத்த வீரர் கொலை செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்து வந்த சக வீரரும் ஒலிம்பிக்கில் இருமுறை பதக்கம் வென்றவருமான சுஷில்குமார் மற்றும் அவரது கூட்டாளி இருவரையும் நேற்று காலை டெல்லி போலீசார் கைது செய்தனர். டெல்லியை சேர்ந்த மல்யுத்த வீரர் சாகர் ராணா(23). இவர், முன்னாள் ஜூனியர் நேஷனல் சாம்பியன். சீனியர் பிரிவிலும் இடம் பெற்று இருந்தார். இவர், ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்த பிரிவில் இரண்டு முறை பதக்கம் வென்ற சக வீரர் சுஷில்குமாருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு தனது நண்பர்களுடன் குடியிருந்தார். இந்நிலையில், சாகர் ராணா மற்றும் அவருடன் தங்கியிருந்த நண்பர்கள்அனைவரையும் வீட்டை காலி செய்யுமாறு சுஷில்குமார் தரப்பினர் கூறினர். இதற்கு மறுப்பு தெரிவித்ததால் அவர்களை வலுகட்டாயமாக வீட்டை விட்டு வெளியேற்றினர். இதனால் ஆத்திமடைந்த சாகர் ராணா, ஸ்டேடியத்தில் இருந்தபோது சக வீரர்கள் முன்பாக சுஷில் குமாரை பற்றி அவதூறாக பேசியதாக தெரிகிறது.
இதுகுறித்து சுஷில் குமாருக்கு தெரியவந்ததால் இருதரப்புக்கும் இடையே ஸ்டேடியத்தின் பார்கிங் ஏரியாவில் தகராறு ஏற்பட்டது. இதில் சாகர் ராணா பலமாக தாக்கப்பட்டதில் அவர் உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணையை தொடங்கினர். உயிரிழந்த ராணாவின் சக நண்பர்கள்இருவர் காயமடைந்து மருத்துமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கொலையில் சம்மந்தப்பட்டதாக சுஷில் குமாரை கைது செய்ய தேடி வந்தனர். ஆனாலும், கடந்த 20 நாளாக போலீசில் சிக்காமல் தலைமறைவாக இருந்தது வந்தார்.
இதையடுத்து, சுஷில்குமாருக்கு எதிராக போலீசார் லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்து அவரை பற்றி துப்பு கொடுத்தால் ₹1 லட்சம் பரிசு வழங்கப்படும் என கூறி தேடி வந்தனர். அதேபோன்று அவரது கூட்டாளி அஜய் என்பவரின் தலைக்கும் ₹50,000 பரிசு அறிவித்து தேடி வந்தனர். இந்நிலையில்,வடமேற்கு டெல்லியின் முன்ட்கா பகுதியில் மறைந்து இருந்தபோது சுஷில் குமார் மற்றும் சக குற்றவாளியாக தேடப்பட்ட அஜய் இருவரையும் போலீஸ் தனிப்படையினர் கைது செய்தனர்.