×

8 மாத கர்ப்பிணியான பெண் மருத்துவர் கொரோனாவுக்கு உயிரிழப்பு: மேலும் அடுத்தடுத்து 3 பெண்கள், டாக்டர்கள் பலி

சென்னை: சென்னை தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 29 வயதான 8 மாத கர்ப்பிணியான பெண் மருத்துவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த ஓராண்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவர்கள், செவிலியர்கள், போலீசார், முன்களப் பணியாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். அதைப்போன்று கொரோனா 2வது அலையிலும் மருத்துவர்கள், செவிலியர்கள் உயிரிழந்துள்ளனர். அதன்படி கடந்த 10 நாட்களுக்கு முன்பு மதுரையை  சேர்ந்த சண்முகப்பிரியா (30). 8 மாத கர்ப்பிணியான பெண் மருத்துவர்  கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து அரும்பாக்கம் மருத்துவமனையில் உதவி சித்த மருத்துவராக பணிபுரிந்தவர் கலை பிரியா (27).

இவருக்கு குழந்தை பிறந்து மூன்று நாட்கள் ஆன நிலையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில் கடந்த 20ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம், போளூரைச் சேர்ந்த கார்த்திகா (29). தோல் சிகிச்சை மருத்துவரான இவருக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. 8 மாத கர்ப்பிணியான மருத்துவர் கார்த்திகாவின் குடும்பத்தினர் ஒரு சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதையடுத்து அவர்கள் பரிசோதனை மேற்கொண்டு தனிமைப்படுத்திக் கொண்டனர். அதன்பிறகு சில நாட்கள் கழித்து  கர்ப்பிணியான மருத்துவர் கார்த்திகாவிற்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதையடுத்து சிகிச்சைக்காக அவர் திருவாண்ணாமலை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பாதிப்பு அதிகமானதையடுத்து சிகிச்சைக்காக கடந்த வாரம் சென்னை வானகரத்தில் உள்ள  தனியார் மருத்துவனைக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை  அளிக்கப்பட்டது. பின்னர் கடந்த 19ம் தேதி உடல்நிலையில் பாதிப்பு அதிகமானதையடுத்து ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் மருத்துவ துறையில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.  



Tags : 8-month-pregnant female doctor dies of corona: 3 more women in a row, doctors killed
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...