புதுடெல்லி: தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர் மற்றுமின்றி அவர்களது குடும்பத்தினரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று மத்திய அரசு திடீரென அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் தங்களது ஊழியர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கான தடுப்பூசி திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இதில், சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மட்டுமே தடுப்பூசியை போட்டுக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அனுமதிக்க முடியாது என்று சில வாரங்களுக்கு முன் மத்திய சுகாதார துறை அமைச்சகம் அறிவித்தது.
இந்நிலையில், தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், அதனை கட்டுப்படுத்த தடுப்பூசி விஷயத்தில் மத்திய சுகாதாரத் துறை சில தளர்வுகளை அளித்துள்ளது. அதன்படி, தனியார் நிறுவனங்களின் வரையறுக்கப்பட்ட விதிமுறைகளின்படி, சம்பந்தப்பட்ட ஊழியருடன் அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவர்களை சார்ந்து இருப்பவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். அதாவது, சம்பந்தப்பட்ட ஊழியர்கள், அவரது மனைவி, அவர்களின் குழந்தைகள், பெற்றோர், மாமியார் மற்றும் சார்புடையவர்கள் நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மையங்களில் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.
தனியார் நிறுவனங்களுக்கு மருத்துவமனைகள் இருந்தால், அங்கிருந்தே தடுப்பூசிகளை வாங்கி போட்டுக் கொள்ளலாம். தனியார் நிறுவனங்கள் நேரடியாக தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய முடியாது. அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனையின் மூலம் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தடுப்பூசிகளை பெற்று ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு போடலாம். அரசின் சார்பில் நடத்தப்படும் தடுப்பூசி மையங்களில் 45 வயது அல்லது அதற்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு இலவசமாக தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். அதேபோல், 18 முதல் 44 வயதுடைய பயனாளிகளுக்கு மாநிலங்கள் நேரடியாக கொள்முதல் செய்யும் தடுப்பூசி திட்டத்தின்படி, தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.