திட்டக்குடி: கடலூர் மாவட்டம் ராமநத்தம் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தலைமையில் போலீசார் வைத்தியநாதபுரம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது போலீசாரை கண்டதும் ஒருவர் அங்கிருந்து ஓடியுள்ளார். இதை பார்த்த போலீசார் அவரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்த சீனிவாசன் மகன் சேகர் (32) எனவும், வைத்தியநாதபுரம் பகுதியில் நிலம் குத்தகை எடுத்து பயிர் செய்து வருகிறார் என தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் மேலும் தீவிர விசாரணை செய்தபோது, வைத்தியநாதபுரம் பகுதியில் அவர் பயிர் செய்யும் வயல் பகுதியில் உள்ள வைக்கோல் போரில் நாட்டு துப்பாக்கி, 50 லிட்டர் சாராயம் மற்றும் வெடிபொருள் தயாரிக்கும் ஜெலட்டின் குச்சி 49, பால்ரஸ் குண்டு 50 மற்றும் வெடி மருந்து பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
இதனை போலீசார் கைப்பற்றினர். மேலும், இதற்கு உடந்தையாக இருந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தாலுகா செல்லம்பட்டு பகுதியை சேர்ந்த பாபு மகன் கபீர் (35), கச்சராபாளையம் பகுதியை சேர்ந்த துரை மகன் கிருஷ்ணமூர்த்தி (20) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இதுகுறித்து ராமநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து நாட்டு துப்பாக்கி, சாராயம், வெடி தயாரிக்கும் பொருட்களை பறிமுதல் செய்தனர்.