திருவொற்றியூர்: மணலி மண்டலம் 19வது வார்டுக்குட்பட்ட மஞ்சம்பாக்கம் பகுதியில் மாநகராட்சி சார்பில் பொது மருத்துவமனை கட்டப்பட்டு, கடந்த சில மாதங்களுக்கு முன் திறக்கப்பட்டது. 3 மாடிகள் கொண்ட இந்த மருத்துவமனையில், 100 படுக்கை மற்றும் ஆய்வகம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இங்கு பொது மருத்துவம், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது, கொரோனா நோயாளிகள் அதிக அளவில் அரசு மருத்துவமனை தேடி வருவதால், இங்கு கொரோனா சிகிச்சை மையம் அமைக்க சுகாதாரத்துறை திட்டமிட்டது. அதன்படி ஆக்சிஜன் வசதிகயுடன் கூடிய 86 படுக்கைகள், 31 சாதாரண படுக்கைகள் என மொத்தம் 117 படுக்கைகள் கொண்ட கொரோனா வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், ரத்த பரிசோதனை மையம் போன்றவையும் அமைக்கப்பட்டது. இதனை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ, வடக்கு மண்டல துணை ஆணையர் ஆகாஷ், செயற்பொறியாளர் உசேன், சுகாதார அதிகாரிகள் வேல்முருகன், லிடியா உள்பட பலர் பங்கேற்றனர். இதேபோல், மாதவரம் மண்டலம் புழல் அடுத்த சூரப்பட்டு தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 86 படுக்கைகள், 84 சித்த மருத்துவ படுக்கைகள், 95 பொது படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்து வைத்தார். பின்னர் அங்கு பணியாற்றும் மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்தினார்.
அப்போது மாதவரம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ எஸ்.சுதர்சனம், மருத்துவர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.