திருவனந்தபுரம்: பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருடந்தோறும் நடை திறக்கப்பட்டு ஒரு நாள் மட்டும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். இவ்வருட பிரதிஷ்டை தினம் இன்று. இதையொட்டி நேற்று மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. சபரிமலை கோயில் தந்திரி கண்டரர் ராஜீவரர் முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போத்தி நடை திறந்து தீபாராதனை நடத்தினார். நேற்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. இன்று அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு பிரதிஷ்டை தின சிறப்பு பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து 25 கலசாபிஷேகம் நடைபெறும். இதன் பின்னர் இரவு 8 மணிக்கு அரிவராசனம் பாடி கோயில் நடை சாத்தப்படும். ஆனி மாத பூஜைகளுக்காக ஜூன் 14ம் தேதி மாலை சபரிமலை கோவில் நடை திறக்கப்படும். கேரளாவில் கொரோனா பரவல் குறையாததால் இம்முறை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.