மும்பை: அரபிக்கடலில் உருவான டவ்தே புயல் கடந்த 16ம் தேதி குஜராத்தில் அதிகாலை கரையை கடந்தது. புயல் காரணமாக மும்பை கடல் பகுதியில் வானிலை மோசமடைந்தது. தென்மேற்கு பகுதியில் 70 கி.மீ. தொலைவில் ஊழியர்களுடன் எண்ணெய் எடுக்கும் பணியில் ஈடுபட்ட பி 305 என்ற கப்பல் கடல் பேரலைகளில் சிக்கியது. கப்பலில் இருந்த நங்கூரங்கள் உடைந்ததில் கடலில் மூழ்கியது. கப்பலில் பணியில் இருந்த 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கடலில் தத்தளித்தனர். 17ம் தேதி முதல் மீட்பு பணிகள் நடந்து வருகின்றது. இதுவரை 188 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக கடற்படை செய்தி தொடர்பாளர் கூறுகையில், “இதுவரை 51 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் 24 பேரை காணவில்லை” என்றார்.
இந்நிலையில் கப்பல் கடலில் மூழ்கியது தொடர்பாக கப்பலின் கேப்டன் மீது மும்பை போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர். புயல் குறித்து எச்சரிக்கை விடுத்தும் கப்பலின் கேப்டன் அதனை அலட்சியம் செய்ததே கப்பல் விபத்துக்கு காரணம் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. உயிர்காக்கும் கவசத்தை அணிந்து கடலில் குதித்து மீட்பு குழுவினரால் மீட்கப்பட்ட கப்பல் பொறியாளர் கொடுத்த புகாரின்பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் சில கப்பல் நிர்வாகிகள் பெயரும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.