மும்பை: மும்பை அருகே மிதவை கப்பல் கடலில் மூழ்கியதற்கு கப்பல் கேப்டனின் கவனக்குறைவே காரணம் என்ற புகாரை அடுத்து அவர் மீது மும்பை காவல்த்துறை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மும்பை கடல்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பார்ஜ் பி-305 என்ற ஊழியர்களை ஏற்றி செல்லும் மிதவை கப்பல் கடந்த திங்கள் கிழமை டவ்-தே சூறாவளியில் சிக்கி நடுக்கடலில் மூழ்கியது. அதில் 261 ஊழியர்கள் பயணித்த நிலையில் நடுக்கடலில் தத்தளித்த 186 பேரை கடற்படை மீட்டிருக்கும் நிலையில் 49 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காணாமல் போன எஞ்சிய 26 ஊழியர்களை தேடும் பனி இரவு பகலாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் புயல் எச்சரிக்கை குறித்து கப்பல் கேப்டன் ராகேஷிடம் கூறியபோது அதனை கேப்டன் புறக்கணித்து விட்டதாக படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தலைமை பொறியாளர் ரஹ்மான் கூறினார். அப்பகுதியில் இருந்த பிற மிதவை கப்பல்களை தொடர்பு கொண்டபோதும், பணியை தொடருமாறு அவர்கள் வற்புறுத்தியதாக ரஹ்மான்புகார் அளித்துள்ளார்.
இதனை அடுத்து பார்ஜ் பி-305மிதவை கப்பலின் கேப்டன் ராகேஷ் பல்லவ் மற்றும் குழுவினர் மீது மும்பை எல்லோ கேட் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சூறாவளியின் போது சக தொழிலாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தியதாக அவர்கள் மீது இந்திய தண்டனை சட்ட பிரிவுகள் 304, 338, மற்றும் 34-கின் கிழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.