புதுடெல்லி: கிழக்கு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள இயற்கை வளங்கள் அழிக்கப்படுவது வேதனை அளிப்பதாக கூறியுள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம், இதுகுறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளை பாதுகாக்கவும், அவற்றின் இயற்கை வளங்கள், கனிமவளங்கள் சுரண்டப்படுவதை தடுக்கவும் நிரந்தர வாரியம் அமைக்க வேண்டும், மலைத் தொடர்களில் இருந்து வரக்கூடிய நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், மரங்கள் உள்ளிட்டவை வெட்டப்படுவது, வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி திமுகவின் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு தீர்பாயத்தின் முதன்மை ஆணையர் ஏ.கே.கோயல் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆணையர், ‘‘மலைத் தொடர்களில் இருக்கும் இயற்கை வளங்கள் அழிக்கப்படுவது மிகவும் வேதனை அளிக்கிறது’’ என்றார். மேலும், இதுகுறித்து பதிலளிக்க மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் மற்றும் மலைத்தொடர்கள் வரக்கூடிய மாநில அரசுகள் ஆகியவைக்கு நோட்டீஸ் அனுப்பி நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.