சென்னை: கொரோனா தடுப்பு பணி குறித்து அனைத்துக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் குழுவுடன் வரும் 22ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட உள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் 22ம் தேதி நடைபெறும் ஆலோசனையில் விஜயபாஸ்கர், ஜவாஹிருல்லா, ஈஸ்வரன் உள்பட 13 எம்எல்ஏ.க்கள் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் தமிழக அரசு, நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து ஆலோசிக்க சட்டமன்ற கட்சி உறுப்பினர்கள் 13 பேர் கொண்ட குழுவை நியமித்து உத்தரவு பிறப்பித்தது. அந்தக் குழுவில் இடம்பெற்றிருக்கும் எம்எல்ஏக்கள் குறித்த அறிவிப்பு கடந்த 13ஆம் தேதி வெளியானது. அதில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், காங்கிரஸின் முனிரத்தினம், பாமகவின் ஜி.கே மணி, பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், மதிமுக சதன் திருமலைக்குமார், ஜவாஹிருல்லா, வேல்முருகன், பூவை ஜெகன் மூர்த்தி என ஒவ்வொரு கட்சியிலிருந்தும் ஒருவர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். ஊரடங்கு, கொரோனா தடுப்பு நடவடிக்கை உள்ளிட்ட அரசின் செயல்பாடுகள் பற்றி இக்குழுவுடன் ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி, முழு ஊரடங்கை நீட்டிப்பதா? என்பது குறித்து இந்த 13 எம்எல்ஏக்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் ஆலோசனை நடத்த உள்ளார். அன்று காலை 11.30 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது….
The post கொரோனா தடுப்பு நடவடிக்கை: அனைத்துக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் குழுவுடன் வரும் 22ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..! appeared first on Dinakaran.