சென்னை: டவ்தே புயலில் காணாமல் போன 9 நாகை மீனவர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘‘கடந்த மாதம் 29ம் தேதி நாகை மீனவர்கள் மணிகண்டன், இடும்பன், மணிவேல், முருகன், தினேஷ், இளஞ்செழியன், பிரவீண், கணேசமூர்த்தி, முகமது உசேன் ஆகிய 9 பேர் அரபிக்கடலில் மீன்பிடிக்க சென்றனர். ஆனால், அவர்கள் கரை திரும்பவில்லை. அவர்கள் டவ்தே புயலில் சிக்கியிருக்கலாம் என்று அவர்களின் குடும்பத்தினர் அச்சம் தெரிவித்துள்ளனர்.
எனவே, இந்த விஷயத்தில் தாங்கள் உடனடியாக தலையிட்டு இந்திய கடற்படை, விமானப்படை மூலம் காணாமல்போன 9 மீனவர்களையும் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.