சென்னை: தமிழகத்தில் நாள்தோறும் கொரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் தேவைப்படுவதால் தமிழகத்திற்கு தேவைப்படும் ஆக்சிஜன் வெளி மாநிலத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அதன்படி, நேற்று திருவொற்றியூர் கான்கார் யார்டுக்கு அரியானா மாநிலத்திலிருந்து 60 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கொண்ட டேங்கர் லாரி ரயில் மூலம் கொண்டு வரப்பட்டது. இதேபோல் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து 30 மெட்ரிக் டன் ஆக்சிஜன் டேங்கர் லாரி ரயில் மூலம் கொண்டு வரப்பட்டது. மொத்தம் 90 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வந்தது. இதனை அதிகாரிகள், ராஜிவ்காந்தி, ஓமந்தூரார், மதுரை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். தினமும் தமிழகத்துக்கு வெளி மாநிலத்திலிருந்து தேவையான ஆக்சிஜன் வாங்கப்படுகிறது. இதனால் தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.