சென்னை: சென்னை அயனாவரத்தில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கான ஆக்சிஜன் வாகனத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு தொடங்கி வைத்தார். சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் நேற்று காலை கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறல் ஏற்படும் நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கும் முன்பு பேருந்தில் ஆக்சிஜன் பெறும் வசதியை இந்து அறநிலை துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு மற்றும் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் தொடங்கி வைத்து ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் பி.கே.சேகர் பாபு பேசியதாவது, தமிழக மக்களை கொரோனாவில் இருந்து மீட்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் முயற்சி செய்து வருகிறார்.
அவர்களுக்கு தமிழக மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். இந்து சமய அறநிலையத்துறையை பொறுத்தவரை இன்று புதிதாக 5 முக்கிய அம்சங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் முக்கியமாக ஆன்மீக அரசியல் என்று பல ஆண்டுகளாக ஆட்சி செய்த அதிமுகவின் சதி திட்டங்களை வெளி கொண்டு வரும் பொருட்டு அறநிலை துறையில் நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் வில்லிவாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வெற்றியழகன், அரசு அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.