திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே வாலிபர் சரமாரி வெட்டி படுகொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளத் தொடர்பு காரணமாக நடந்துள்ளதா என்று போலீசார் விசாரிக்கின்றனர். திருவள்ளூர் அடுத்த மப்பேடு இருளஞ்சேரி புதிய காலனி பெருமாள்கோயில் தெருவை சேர்ந்தவர் காமேஷ் (33). இவர் தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார். இவரின் மனைவி பாரதி (22). இவர்களுக்கு மித்ரன் என்ற மகன், நிகிதா என்ற மகள் உள்ளனர். கடந்த ஒரு மாதமாக பணிக்கு செல்லாமல் காமேஷ் விவசாய பணியில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.
இந்தநிலையில் அதே பகுதியை சேர்ந்த சிலர் கிராமத்தில் இளைஞர்கள் கஞ்சா அடிப்பது தொடர்பாக போலீசாருக்கு காமேஷ் தகவல் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. இதன்காரணமாக காமேஷ் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் இடையே பிரச்னை ஏற்பட்டுவந்ததாக தெரிகிறது. நேற்றிரவு வீட்டில் இருந்து காமேஷ் பைக்கில் சென்றார். இருளஞ்சேரி கிராமத்தில் உள்ள ஆலமரம் பகுதியில் அவர் சென்றபோது பின்னால் பைக்கில் வந்த மர்மநபர்கள் காமேஷ் பைக்கை சுற்றிவளைத்து அவரை சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த காமேஷ், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து அவரை கொலை செய்த கும்பல் தப்பிச்சென்றது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் திருவள்ளூர் போலீஸ் டிஎஸ்பி (பொறுப்பு) அசோகன் தலைமையில் மப்பேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணையா, எஸ்ஐ சுரேஷ் ஆகியோர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். காமேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அப்பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் காமேசுக்கு தொடர்பு இருந்துள்ளதாக தெரிகிறது.
இதன் காரணமாக அவரை கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் கஞ்சா பிரச்னையில் கொலை நடந்துள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரிக்கின்றனர். இந்த நிலையில், கொலை தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த கமலக்கண்ணன், கோபாலகிருஷ்ணன் மற்றும் வசந்த் ஆகியோர் மப்பேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணையன் தேடி வருகின்றார். இதில் கமலக்கண்ணன், கிராமத்தில் கஞ்சா விற்பளை செய்தது பற்றி போலீசாருக்கு கொலை செய்யப்பட்ட காமேஸ் தகவல் கொடுத்துள்ளார். இதனால் அவர்கள் இடையே முன்விரோதம் இருந்துள்ளது.