புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா தொற்று பாதித்து சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ரங்கசாமி நேற்று பிற்பகல் புதுச்சேரி திரும்பினர். முன்னதாக கோரிமேடு எல்லையில் தொண்டர்கள் சூரத்தேங்காய் உடைத்தும், பூசணிக்காய் சுற்றியும் அவரை திருஷ்டி கழித்து வரவேற்றனர். பின்னர் ரங்கசாமி கோரிமேட்டில் உள்ள அப்பா பைத்தியம்சாமி கோயிலுக்கு சென்று வழிபட்டார். பின்னர், தனது காரில் திலாசுப்பேட்டையில் உள்ள இல்லத்து சென்று தனிமைப்படுத்திக்கொண்டார். கொரோனா பரவல் தடுப்பு பணிகள் குறித்தும், ஊரடங்கு காலத்தில் நிவாரணங்களை வழங்குவது குறித்தும் தொலைபேசி வாயிலாக அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.