×

கும்ப்ளே, சேவாக் பாராட்டு; அடுத்த பொல்லார்ட் என்பதெல்லாம் ஓவர்: தமிழக வீரர் ஷாருக்கான் `தன்னடக்கம்’

இந்தியாவில் சமீபத்தில் நடைபெற்ற 14வது ஐபிஎல் தொடர் ஏப்ரல்  9ஆம் தேதி துவங்கி 29 போட்டிகள் முடிவடைந்த நிலையில் வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியதால் தொடர் பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் பல இளம் வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தனர். அந்த வகையில் கவனத்தை ஈர்த்த முக்கியமான வீரர்களில் தமிழகத்தைச் சேர்ந்த அதிரடி வீரர் ஷாருக்கானும் ஒருவர். பஞ்சாப் அணிக்காக பின்வரிசையில் பினிஷராக களமிறங்கும் ஷாருக்கான் தான் விளையாடிய போட்டிகளில் எல்லாம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

இந்நிலையில் ஷாருக்கானை ஏற்கனவே பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் கும்ப்ளே புகழ்ந்து இருக்க அதனை தொடர்ந்து சேவாக்கும் அவரை அண்மையில் புகழ்ந்தார். அதில் அவர், ``இளம் வயதில் பொல்லார்ட் எப்படி விளையாடினாரோ அதேபோன்ற ஆட்டத்தை தற்போது ஷாருக் கான் வெளிப்படுத்தி வருகிறார்’’ என்று கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது அந்த கருத்துக்கு பதிலளித்து தமிழக வீரர் ஷாருக்கான் கூறுகையில், ``அனில்கும்ப்ளே, சேவாக் போன்ற ஜாம்பவான்களின் பாராட்டைப் பெற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தந்துள்ளது. இருப்பினும் என்னை பொல்லார்ட் போன்ற பெரிய வீரர்களுடன் ஒப்பிட்டு பாராட்டிப் பேசுவது எல்லாம் மிகப் பெரிய விஷயம்.

ஆனால் இப்போதைக்கு எனது கவனம் எல்லாம் எனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்குவதுதான். நான் இப்பொழுது தான் எனது கிரிக்கெட் பயணத்தை துவங்கி உள்ளேன். அதனால் இனி வரும் காலங்களில் என்ன செய்யமுடியுமோ அதனை சரியாக திட்டமிட்டு எனக்கென ஒரு பெயரை சம்பாதிக்க இருக்கிறேன்’’ என்றார். மேலும் அவர் கூறுகையில், ``பஞ்சாப் அணி கேப்டன் ராகுல் மற்றும் பயிற்சியாளர் கும்ப்ளே ஆகியோர் கொடுக்கும் சுதந்திரத்தால் நான் எந்தவித கவலையுமின்றி விளையாடி வருகிறேன்’’ என்றார்.

Tags : Kumble ,Sehwag ,Pollard ,Tamil Nadu ,Shah Rukh Khan , Kumble, Sehwag praise; The next Pollard is over: Tamil Nadu player Shah Rukh Khan 'restraint'
× RELATED பாண்டியா பாவம்…தேற்றுகிறார் போலார்டு