சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொருளாளர் முகமது யூசுப் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். இவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி பொருளாளர் முகமது யூசுப். இவர், கடந்த ஏப்ரல் 25ம் தேதி, தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதையடுத்து தனிமைப்படுத்தி கொண்டிருந்தார். தொற்றின் தீவிரம் அதிகமானதால் சென்னை மண்ணடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் உயிரிழந்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘‘விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலப் பொருளாளர் முகமது யூசுப் கொரோனா தொற்று காரணமாக மரணமடைந்த செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
திருமாவளவனை தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினேன். முகமது யூசுப் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், வி.சி.க. தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என கூறியுள்ளார். விசிக தலைவர் திருமாவளவன் இரங்கல் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘‘இறுதி மூச்சுவரை எனக்கு தோளோடு தோள்கொடுத்து நின்றவர். அவர் இன்று நம்மோடு இல்லை என்பதை என்னுள்ளம் ஏற்கவில்லை. கண்ணியம் மிகுந்த தோழமைக்கு அடையாளமாய் கடைசி மூச்சுவரையில் வாழ்ந்து காட்டிய முகமது யூசுப் மறைவு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.