சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே கடம்பூர் மலைப்பகுதியில் விவசாய விளை நிலத்தில் புகுந்த காட்டு யானைகள் அட்டகாசம் செய்து வருவதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசிக்கின்றன. கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் வனத்தைவிட்டு வெளியேறி கிராமங்களில் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்துவது தொடர்கதையாக உள்ளது.
நேற்று காலை கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 2 காட்டு யானைகள், விவசாய விளை நிலத்தில் சுற்றித்திரிந்தன. யானைகள் பகல் நேரத்தில் விவசாய விளை நிலத்தில் சுற்றி திரிவதைக் கண்ட கிராம மக்கள் அச்சமடைந்தனர். சிறிது நேரம் அங்கும் இங்குமாக ஓடிய காட்டு யானைகள், விவசாய நிலத்தை விட்டு வெளியேறி மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றன.